பெயர்தல் (நாவல்)
பெயர்தல் (நாவல்) - இல. அம்பலவாணன்; பக்.140; ரூ. 170; காவ்யா, சென்னை-24; ✆ 044-23726882.
எண்பது ஆண்டுகளாக, குடிசைகள் அமைத்து சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து
வரும் ரெங்கபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தோர், குடியிருப்பை காலிசெய்துவிட்டு புலம்பெயரும் போது ஏற்படும் சிரமங்களை, கண்முன் காட்சியாக வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர்.
அத்தியாவசிய வசதிகள் இல்லாத குடிசை பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி, அங்கு வசிப்பவர்களுக்கே அவற்றை கொடுக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். இதுகுறித்த தகவலைத் தெரிவிப்பதில் அரசு துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், மக்களுக்கு ஏற்படும் மனக்குமுறல்கள், குழப்பங்கள், அதைத்தொடர்ந்த நீதிமன்ற நடவடிக்கைகளை எளிய பேச்சுத் தமிழில் படம் பிடித்து காட்டியுள்ளது இந்த நாவல்.
அன்றாடம் வருவாய் ஈட்டும் தொழிலாளர்களின் பணிச்சூழல், அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ள போக்குவரத்து, கல்விக் கூடம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. நூலிடையாக, குடும்பக் கதையையும், மதுப்பழக்கத்திலிருந்து மைத்துனர் விலகுவதையும் கதை ஓட்டத்திலிருந்து விலகாமல் அழகாக கதையை நகர்த்தியுள்ளார் நாவலாசிரியர். இடம்பெயர வேண்டும் என்றால் அதற்கான செலவுகள், பாதிப்புகள் குறித்து ஒவ்வொருக்கும் ஏற்படும் மனநிலைகள், நம்மையும் கதையுடன் இணைத்துவிடுகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய குடியிருப்பில் மக்கள் குடியேறுவதுடன் அடிப்படை வசதிகளுடன் வீடு அமைந்ததால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியுடன் நாவல் நிறைவுபெற்றாலும், மக்களிடையே ஏற்பட்ட மனக்குழப்பங்கள் 'அதீத சிந்தனை' என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. வாசிக்க நல்லதொரு நூல்.