திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்
திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்; பி.ஜி.எஸ். மணியன்; பக். 432; ரூ.450; வைகுந்த் பதிப்பகம்; இராமன்புதூர்; நாகர்கோவில்- 629 002. ✆ 93854 87268.
திரைப்பட இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனின் திரையுலக வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவு செய்யும் விதமாக வெளிவந்துள்ளது இந்நூல்.
தனது பதினான்காவது வயதில் நாகர்கோவிலிலிருந்து பஸ் பிடித்து, திருநெல்வேலி வந்து அங்கிருந்து ரயில் ஏறி சென்னைக்கு வந்து, பால கந்தர்வ நாடக சபாவில் சேர்ந்தது, வருவாயின்றி அந்த சபா மூடப்பட சில காலம் உணவு விடுதியில் சர்வராகப் பணியாற்றியது, பின்னர் நாடகத்தில் நடித்தது, ஸ்பெஷல் நாடக கம்பெனியின் நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்தது என்று மகாதேவனின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் துயரம் மிக்கதாகவே இருந்திருக்கிறது.
பின்னர், ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 'நந்தகுமார்' படத்தின் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனிடம் உதவியாளராகச் சேர்ந்தது, அதன்பின், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மனோன்மணி' படத்தின் இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணத்திடம் உதவியாளராகப் பணியாற்றியது, அப்படத்தில் ஒரு பாடலுக்கு இவரை இசையமைக்க வைத்து படத்தின் டைட்டிலில் தன் பெயரோடு மகாதேவன் பெயரையும் இணைத்தது, அதனைத் தொடர்ந்து கவிஞர் ச.து.சு. யோகியார் இயக்கிய 'ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை' படத்தின் மூலம் கே.வி. மகாதேவன் தனியே இசையமைக்கத் தொடங்கியது என பல்வேறு சுவையான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
'திருமங்கை ஆழ்வார்' படத்தில் ஒரு நிமிடக் காட்சியில் மகாதேவன் நடித்திருக்கிறார் என்பதும், மூன்று தீபாவளி கண்ட 'ஹரிதாஸ்' படத்தின் டைட்டிலில் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் பெயர் இடம்பெறவில்லை என்பதும், தன்னிடம் பணியாற்ற வாய்ப்பு கேட்டு வந்த எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிவுரை கூறி வாழ்த்தி (சிறிய தொகையும் கொடுத்து) அனுப்பினார் என்பதும் வியப்பான செய்திகள்.
யாரையும் பின்பற்றாத, யாராலும் பின்பற்ற முடியாத தனித்துவக் கலைஞரான கே.வி. மகாதேவன் குறித்த ஏராளமான அரிய செய்திகளைக் கொண்டுள்ளது இந்நூல்.