இந்திய இலக்கியச் சிற்பிகள் கோ. கேசவன்
இந்திய இலக்கியச் சிற்பிகள் கோ. கேசவன் - வீ. அரசு; பக். 128; ரூ. 50; சாகித்திய அகாதெமி, சென்னை -18; ✆ 044 - 24311741.
சமூக வரலாற்று ஆய்வறிஞரான கோ. கேசவன், தமிழுக்கான அவருடைய பங்களிப்புகள் பற்றி பறவைப் பார்வையில் அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
மார்க்சிய தத்துவத்தைப் பயின்று அதையே வாழ்முறையாகவும் ஆய்வுக்கான அடிப்படை முறையியலாகவும் வரித்துக் கொண்ட இவர், இடதுசாரி, சுய
மரியாதை, தலித் இயக்கங்கள் பற்றிய ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வில், 'தமிழ்ச் சமூகத்தில் சங்கம் இருந்ததா, இல்லையா' என்பது பற்றிய கேசவனின் வாதங்களும் வரும் முடிவும் குறிப்பிடத்தக்கவை.
Advertisement
இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் கவிதைகள் பற்றிய ஆய்வில், க.நா. சுப்ரமண்யம், கண்ணதாசன், ஆத்மாநாம் ஆகியோரை எடுத்துக்கொண்டவர், கண்ணதாசனின் கவிதைகளில் அவர் சார்ந்திருந்த கட்சிகளின் அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துகள் வெளிப்படுகின்றன என்கிறார்.
பாரதியார் பற்றிய இவருடைய ஆய்வுகள் தனித்தன்மை மிக்கவை. பாரதியின் பல பரிமாணங்களையும் ஆய்வுக்குள்படுத்தியுள்ள கேசவன், ஆராய்ச்சிபூர்வமாக இன்னமும்
பாரதிக்கு உரிய வரலாறு தொகுக்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.
தமிழ்ச் சமூக இயக்கங்கள் பற்றிய இயலில், தக்க மேற்கோள்களுடன் பொதுவுடைமை இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் பற்றிய கேசவனின் ஆய்வுப் பார்வை விளக்கப்படுகிறது. தலித்தியம், மார்க்சியம் குறித்து ஆய்வுகள் மூலம் தனித்தனி இயல்களில் விரிவாகப் பேசப்படுகின்றன.
பின் இணைப்பாக கேசவனின் வாழ்க்கைக் குறிப்பு, ஆக்கங்கள், மொழியாக்கம் பற்றிய தகவல் தரப்பட்டுள்ளன. புதிய வாசகர்களையும் கோ. கேசவனின் நூல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிற வகையில் அமைந்திருக்கிறது இந்த நூல்.