காந்திய சிந்தனைக் கதிர்கள்
காந்திய சிந்தனைக் கதிர்கள் - மு.மாரியப்பன்; பக்.288; ரூ.300; கதர் நண்பர்கள் மன்றம், காந்தி மியூசியம் வளாகம், மதுரை - 625020.
'சர்வோதயம் மலர்கிறது' வார இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். காந்தியம் என்ற மையப்புள்ளிதான் கட்டுரைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.
'அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்' என்ற உன்னத நோக்கத்தில் ராஜாஜி அறிமுகப்படுத்திய 'அரை நாள் கல்வித் திட்டம்' காழ்ப்புணர்வுடன் 'குலக் கல்வித் திட்டம்' என்று பரப்புரை செய்யப்பட்டு முடக்கப்பட்டது. 1967-இல் முதல்வர் அண்ணாவிடம், ராஜாஜி வலியுறுத்திய கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறு ஜெயபிரகாஷ் நாராயண் வேண்டுகோள் விடுத்தார் என்ற செய்தி பலரும் அறியாதது என்பது மட்டுமல்ல; ராஜாஜியின் மீதான விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
பகத்சிங்கை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க மகாத்மா காந்தி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக பல்வேறு ஆதாரங்களை இந்நூல் முன்வைக்கிறது. திலகர், காமராஜர், வினோபா பாவே, சத்தியமூர்த்தி, இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பன உள்ளிட்ட கட்டுரைகள் ஆய்வு நோக்கிலும், உண்மையை நிலைநிறுத்தும் உணர்வுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பூணே ஒப்பந்தம், சிப்பாய்க் கலகம், முல்லைப் பெரியாறு சிக்கல், இட ஒதுக்கீடு, உச்சநீதிமன்றத்தில் கேள்வி ஆகிய கட்டுரைகள் சமூக, வரலாற்று சிக்கல்களை விவாதித்து தீர்வுகளை முன்வைக்கின்றன. கடந்த கால வரலாறுகளைப் படிப்பதன் மூலம் நம் நாட்டின் பெருமைகளை உணர்ந்து எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியும் என்ற கருத்துக்கு இந்நூல் வலு சேர்க்கிறது.