அம்பேத்கர் பார்வையில் சாதி ஒழிப்பு
அம்பேத்கர் பார்வையில் சாதி ஒழிப்பு - டாக்டர் அம்பேத்கர்; பக்.220; ரூ.250; அன்பு பதிப்பகம், சென்னை-14; ✆ 73389 84668.
ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்து புத்தி கூர்மையால் உயர்ந்தவர், அரசியல் சாசனத்தை வடிவமைத்த வரலாற்று நாயகர்... என்று அம்பேத்கரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெற்றது.
ஜாதி ஒழிப்பு குறித்து அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், முன்வைத்த வாதங்கள், காந்தியடிகளின் ஹரிஜன் இதழில் வெளிவந்த கட்டுரைகளுக்கான மறுப்புகள், மனுதர்மம் குறித்த விளக்கம்... என்று பல்வேறு தளங்களில் அம்பேத்கர் ஜாதி ஒழிப்புக்காக மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கிறது இந்த நூல்.
பெண்கள் குறித்து மனுதர்மம் கூறுவது, அன்றைய கால தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் விவரமாக எடுத்துரைக்கிறது. மனு தர்மம், ஜாதி, மதப் பிரச்னைகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் இன்றைய அரசியல் சூழலில் ஏற்படும் பல்வேறு விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் நூலாக இது அமைந்துள்ளது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில், தனது இளமைகாலத்திலேயே அம்பேத்கர் வலியுறுத்தி வந்ததை இந்த நூல் வெளிக்கொணருகிறது.
சட்ட மேதையின் நூல் என்பதால், சட்டம் குறித்த தெளிவுரைகளும் உண்டு. ஜாதி, மத, இன, மொழி, அரசியல் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்பும் தேசப் பற்றாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.