பின்நவீனத்துவத் தமிழ் இலக்கிய விமரிசனத்தின் பன்முகங்கள்
பின்நவீனத்துவத் தமிழ் இலக்கிய விமரிசனத்தின் பன்முகங்கள் - தமிழவன்; பக்.144; ரூ.365; சாகித்திய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை 600 018; ✆ 044-24311741.
பின்நவீனத்துவம் குறித்த பத்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. நவீனம், நவீனத்துவம், பின்நவீத்துவம் உள்ளிட்டவற்றை விளக்க முற்படும் தமிழவன் அறிமுகக்கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: கட்டுரை எழுதப்படுவதும் தமிழில்; வாசிப்பவர்களும் தமிழர்கள். எனவே, பின் நவீனத்துவம் என்ற சொல் தமிழ்ச் சமூகம் சார்ந்து விளக்கப்பட வேண்டும்; அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ பின் நவீனத்துவம் என்பது ஒன்றாக இருக்கும்போது தமிழ்ச் சமூகத்தில் இந்தச் சமூகம் சார்ந்து பின்நவீனத்துவம் விளக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். அந்த வகையில் பெரியாரியல் பின்புலத்திலும் கட்டுரைகள் அமைந்துள்ளன.
பின்நவீனத்துவம் என்ற மேற்கத்திய கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய - தமிழ் பண்பாட்டு அழகியலை அணுகுவதில் கருத்து ரீதியாகவும் மொழி ரீதியாகவும் குறைபாடு உள்ளது என்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது. அப்படி எனில் இந்த மண், மக்களின் அழகியல், பொருளாதாரம் சார்ந்த கருத்துகளை மதிப்பிட ஒரு புதிய கோட்பாடு சொல்லாடல் தேவைப்படுகிறது. 'பின்நவீனத்துவம்: ஓர் அறிமுகம்' என்ற ச.வின்சென்ட்டின் கட்டுரை பல கருத்துகளின் தொடர்ச்சியின் தொகுப்பாக உள்ளது.
'தமிழ்ச் சூழலை முன்வைத்து: சில மேலை அறிஞர்கள் வழி பின்நவீனத்துவம்' என்கிற தமிழவன் கட்டுரை தமிழ் சூழலுக்கு ஏற்ற பின் நவீனத்துவத்தை எப்படி வடிவப்படுத்துவது, எதை ப் பற்றி பிரதானமாகப் பேச வேண்டும் என்பது போன்ற தற்கால சிக்கல்களை முன்வைக்கிறது.
மேற்கத்திய சித்தாந்தங்களை அறிமுக அளவில் கூட அறிந்து கொள்வதில் தமிழ்ச் சொல்லாக்கங்களில் உள்ள சிக்கல்களை புத்தகம் முழுவதும் காண முடிகிறது. பெரியாரியல், மார்க்சியம் கருத்தாடல்களில் ஆர்வம் கொண்ட தமிழ் வாசகர்களுக்குப் பயன்படும் நூல்.