நம்பிக்கை மகுடம் - டாக்டர் ஞானபாரதி; பக்.272; ரூ.200; இளைஞர் இந்தியா புத்தகாலயம், சென்னை-600 060; ✆ 93817 01961.
'முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாமானியர்களும் சாதனையாளர்களாக மாறலாம். நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் எல்லாமே ஆகிவிட்டது. உலக சரித்திரத்தில் காணப்படும் மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் நம்பிக்கையின் சின்னங்களே அன்றி வேறில்லை. நம்பிக்கையைவிட உலகில் வேறு அதிசயங்கள் இல்லை' என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.
சரித்திர நாயகர்களின், சாதனையாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த அதிசய நிகழ்வுகளை, அசாத்தியங்கள் சாத்தியமான காட்சிகளை நம் கண் முன் காண்பதைப் போல், நமக்கு உற்சாகமூட்டும் வகையில் ஒவ்வொரு பக்கத்திலும் காட்சிப்படுத்துகிறார்.
நடக்க முடியாதவர்களை நம்பிக்கையோடு நட என்று கூறி நடக்க வைத்த இயேசு நாதர், அனைத்து அதிகாரங்கள் போனாலும் என்னைவிட்டு நம்பிக்கை போகாது என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், ஒன்பது முறை தோல்வியுற்றாலும் பத்தாவது முயற்சியில் வெற்றியடைவேன் என்று கூறிய ஜார்ஜ் பெர்னாட்ஷா, உலகைவிட்டு வெளியே நிற்க வைத்தால் உலகையே அசைத்துக் காட்டுவேன் என்று மன்னரிடமே சவால்விட்ட கணித மேதை ஆர்க்கிமிடீஸ், நம்பிக்கையோடு முயன்று தொழில் நஷ்டத்தைச் சமாளித்து முன்னேறிய ஹென்றி ஃபோர்டு, போர்க் களத்தில் வீரர்களுக்கு உற்சாகமூட்டிய ஜப்பானிய தளபதி நோபாகா மற்றும் மாவீரன் நெப்போலியன், ஜார்ஜியா மாகாண ஆளுநராகப் பதவி விலகி நம்பிக்கையோடு மக்களைச் சந்தித்து அதிபரான ஜிம்மி கார்டர், விபத்தில் படகு சிக்கியபோதும் படகோட்டிக்கு நம்பிக்கை விதையை விதைத்துத் தப்பிய மாவீரர் சீசர் உள்ளிட்ட எண்ணற்றோரைப் பற்றி அறிய முடிகிறது.
நம் நாட்டின் தலைவர்களான மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உள்ளிட்டோரின் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.