குடந்தை மாலியின் முப்பெரும் நாடகங்கள்-நாடகமாக்கம், வசனம், இயக்கம் - குடந்தை மாலி; பக்.238; ரூ.240; வனிதா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 98844 41941.
கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் நாடக உலகில் வலம் வந்துள்ள குடந்தை மாலி 40 நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். அவர் எழுதிய மூன்று குறிப்பிடத்தக்க நாடகங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
மகான் ஸ்ரீ நாராயண குரு, நம்மவர்கள், ஞானபீடம் ஆகிய மூன்று நாடகங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மூன்று நாடகங்களுமே சமூக சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கியவை.
கேரளத்தில் 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாராயணகுரு சமூக சீர்திருத்தவாதியும் சிறந்த மெய்ஞானியும் ஆவார். இவரது அவதார காலம் முதல் முக்தி அடைவது வரை காட்சிகளாக அமைத்து முதல் நாடகம் புனையப்பட்டுள்ளது.
"தெய்வம் ஒன்று- அதனை எந்த ரூபத்திலும் வழிபடலாம்' என்ற போதனையுடன் சேவையாற்றி வந்த அவருடைய ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ராஜாஜி, ரமணர் வரும் காட்சிகளை அமைத்து, அவர்களுடனான உரையாடலில் நாடகத்தை புதிய தளத்துக்கு உயர்த்தியுள்ளார் குடந்தை மாலி.
தொகுப்பின் இரண்டாவது நாடகம் "நம்மவர்கள்'. தனது மகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் நெருக்கடியில் உள்ள ஒரு தந்தையை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்புரிய அனுப்புகிறது பாகிஸ்தான் பயங்கரவாதக் குழு. பல விறுவிறுப்பான வாதங்களைக் கொண்ட காட்சிகளை இதில் அமைத்துள்ளார் நாடகாசிரியர்.
மூன்றாவது நாடகமான 'ஞானபீடம்' ஒரு சிற்றூரில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. ஜாதி உரசல், மதம் மாற்றத்துக்கு மாற்றாக சமூக நல்லிணக்கத்தை முக்கியச் செய்தியாக கொண்டது.
தவ வலிமையால், வாழும் முறையினால் யார் வேண்டுமானாலும் பிராமணனாக ஆகலாம் என்பதை ஜாபாலி, விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகளின் உதாரணங்களுடன் உபதேசிக்கும் மகான் மூலம் இன்றைய சமூகத்துக்கு வழிகாட்டுகிறார் நாடகாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.