தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 (கேள்வி-பதில்-தீர்வு)
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன் மற்றும் அதன் நன்மைகளை இந்நூலின் மூலம் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 (கேள்வி-பதில்-தீர்வு)-தா.ஸ்ரீதர்; பக்.206; ரூ.250; ஸ்ரீ ஹரிஷ் பதிப்பகம், கடம்பத்தூர் - 631 203, ✆ 94454 04640.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்தச் சூழலில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன் மற்றும் அதன் நன்மைகளை இந்நூலின் மூலம் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து எவ்வாறு கேள்வி எழுப்ப வேண்டும்; அந்தக் கேள்வி மனுவை தயாரிக்கும் முறை, கேள்விக்குப் பதில் கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ஆகியவற்றை எடுத்துரைக்கிறது இந்த நூல். இதன்மூலம், ஆர்டிஐ தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுவதுடன், பல்வேறு புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவியாக உள்ளது.
மொத்தமாக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகள் குறித்து அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும் என்று இந்த நூலின் மூலம் பொதுமக்களிடம் வலியுறுத்துகிறார் நூலாசிரியர். அதேபோல், ஆர்டிஐ-யின் மூலம் தான் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் அந்தக் குறைகளைத் தீர்க்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் நூலாசிரியர் இதில் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 2005-ஆம் ஆண்டுமுதல் ஆர்டிஐ குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து, ஆர்டிஐ-யின் மூலம் வெளியான முக்கிய தகவல்கள், அதனடிப்படையில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு நாளிதழ்களில் வெளியான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.