காவியம் முழுவதும் நல்லறமே பாடிய கம்பன்!-குரு இராமமூர்த்தி; பக்.800; ரூ.850; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600 017. ✆ 044-2434 2926.
திருக்குறளுக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு தமிழறிஞரும் தங்களது தமிழ்ப் புலமையை உலகுக்கு வெளிப்படுத்தவும், தங்களது வாழ்நாள் கடனாகக் கருதுவதும் கம்ப காதை குறித்து எழுதுவதைத்தான். வள்ளுவன் தந்த மறைக்கும் கம்பன் எழுதிய ராமகாதைக்கும் அடிப்படை ஒன்றுதான் -அறம்!
அதனால்தான் 10,200 விருத்தப்பாக்களைக் கொண்ட கம்ப ராமாயணத்தில், 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட திருக்குறள் ஆதி முதல் அந்தம் வரை பரவிக் கிடக்கிறது. குறளைப் பரப்பும் நோக்கிலேயே கம்ப காதை படைக்கப்பட்டதோ என்று கருதும் வகையில் ஏறத்தாழ 700-க்கும் அதிகமான குறள்கள் கம்பரால் தமது ராமாயணத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. அதில் வியப்படைய ஒன்றுமில்லை. இரண்டுமே அறம் பாடிய நூல்கள்.
இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால் குருஇராமமூர்த்தி எழுதிய 'காவியம் முழுவதும் நல்லறமே பாடிய கம்பன்!' என்கிற நூலின் நோக்கத்தையும், அதன் ஆக்கத்தையும் வரவேற்பதில் யாருக்கும் தயக்கம் இருக்காது. கம்ப காதையின் ஒவ்வொரு படலத்தையும், ஏன் ஒவ்வொரு பாடலையும் நுண்ணாடியில் ஆய்வதுபோல அதில் புதைந்திருக்கும் அறத்தின் கூறுகளைக் கண்டறியும் முனைப்புதான், அவர் தொகுத்து வழங்கி இருக்கும் இந்த நூல்.
கம்பன் எழுதிய இராமகாதை எதிர்கொண்ட சவால்களும், அரங்கேற்றத்துக்கு முன்பும் பின்பும் சந்தித்த சுவாரஸ்யமான சோதனைகளும் நூலாசிரியரால் ராமாயண சுவாரஸ்யம் போலவே தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அவை செவிவழிச் செய்திகள்தான் என்றாலும்கூட, புத்தகத்தைப் புரட்டிப் படிக்க முற்படும் கம்பனில் பரிச்சயம் இல்லாத பாமரனையும்கூட, புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவும், கம்பன் பாடிய நல்லறங்களை படித்து உள்வாங்கவும் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
பரதனின் சொல்லறம், குகனின் பேரறம், சீதையின் நல்லறம், இராமனின் பேரறம், அனைத்தையும் வெளிக்கொணர்வதில் கம்பனின் கவிதையும் இமயமாக உயர்ந்து நிற்கிறது என்பதை உணர்த்த முற்பட்டிருக்கிறார் நூலாசிரியர். அறத்தின் நாயகன் இராமனின் காவியத்தில் கம்பன் பாடிய நல்லறங்களை தான் ரசித்ததுபோலப் பதிவு செய்திருக்கிறார் குரு இராமமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.