பணச்சடங்கு
புனைகதை, புனைவுக் கட்டுரைகளில் தனக்கென முத்திரை பதித்துள்ள இவரை எழுத்துலகில் அ.முத்துலிங்கத்தின் உலகைச் சார்ந்த இன்னுமொரு எழுத்தாளர் என்று நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.
பணச்சடங்கு-ஆசி கந்தராஜா; பக்.154; ரூ.200; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 078, ✆ 99404 46650.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான நூலாசிரியர், பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். புனைகதை, புனைவுக் கட்டுரைகளில் தனக்கென முத்திரை பதித்துள்ள இவரை எழுத்துலகில் அ.முத்துலிங்கத்தின் உலகைச் சார்ந்த இன்னுமொரு எழுத்தாளர் என்று நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.
தற்கால தமிழ் இலக்கியத்துக்கு புதிய வளத்தையும், வனப்பையும் அளிக்கிறார் என்பது அவருடைய கதைகளைப் படிக்கும்போது தெரியவருகிறது.
Advertisement
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அந்த நாட்டு நாகரிகம், வாழ்க்கை முறைகளில் படும் துயரங்கள், வேதனைகள், அன்றாட நிகழ்வுகளைப் படிக்கப் படிக்க மனம் கலங்குகிறது.
இளம்வயதில் தந்தையையும், பின்னர் தாயையும் இழந்தவர் தாயின் மறைவுக்குப் பின்னர் தனக்கு அவர் விட்டுச் சென்ற பணக்குவியலை பல்லாண்டு கழித்துப் பார்த்து வியப்பை வெளிப்படுத்தும் 'அந்திமம்', இலங்கையில் பெற்றோரை இழந்த சிறுவன் ஆஸ்திரேலியாவில் படும் துயரங்களை வெளிக்கொணரும் 'முகமூடி மனிதர்கள்', நான்கு பெண்களைத் திருமணம் செய்து 14 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர் தனக்கு 15-ஆவதாக ஆண் குழந்தை பிறந்த கதையை விவரிக்கும் 'ஆண் குழந்தை', சிட்னியில் நடைபெறும் திருமண விழாவுக்குச் செல்லும் நாகலிங்கம் மாஸ்டர் திருமண வரவேற்பில் தனக்கு தெரிந்தவரின் மகனைப் பார்த்து பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து வியக்கும் 'பணச்சடங்கு' என்று ஒவ்வொரு கதையும் படிக்கப் படிக்க புது அனுபவமாகவே இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு ரகம்.