சுதந்திரப் போரில் தமிழகத் தியாகிகள் (தொகுதி 3)- முனைவர்கள் ஜே.ஸ்டெல்லா, ம.ஜெபசெல்வி; பக்.382; ரூ.800; மதி பப்ளிஷர்ஸ், சென்னை-600 095; ✆ 99418 71351.
சுதந்திரப் போராட்டத்தில் தலைவர்களையே நாம் நினைவில் வைத்திருக்கும் நிலையில், உயிரையும், பொன் - பொருள் - உடைமைகளைத் துறந்த ஆயிரக்கணக்கானோர் அறியப்படாமல் உள்ளனர். இவர்களின் தியாகத்தை வெளிக்கொணரும் முயற்சியில், இரு நூல்களை வெளியிட்டுள்ள ஜே.ஸ்டெல்லா மூன்றாவதாக இந்த நூலை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம், ராணுவ மையம், ஐ.என்.ஏ.வில் பணியாற்றியவர்களின் வாரிசுதாரர்கள் பேட்டி, நூல்கள், செய்தித்தாள்கள் என்று பலவகைகளில் கிடைத்த தகவல்களின்படி, 200-க்கும் மேற்பட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளதோடு, அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பிரிட்டிஷ் அரசின் காவலர் என்று தெரிந்தவுடன் அவருக்குப் பாதியில் சவரம் செய்ய மறுத்து நீதிமன்றத்தால் சிறைத் தண்டனையைப் பெற்ற வேதாரண்யம் வைரப்பன், கோவையில் 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய
சு.ராமசாமி என்ற ஒண்டிப்புத்தூர் காந்தி, அரசு வழங்கிய தியாகிகளுக்கான ஓய்வூதியத்தைப் பெற மறுத்த தஞ்சாவூர் ந.ராமரத்தினம், குடியரசுத் தலைவரானவுடன் ஆர்.வெங்கட்ராமனே தன்னை நேரில் வந்து சந்தித்தபோதும் தனக்கு எதுவும் வேண்டாம் என்று பெருந்தன்மையோடு கூறிய ஈரோடு மு.பெ.நாட்டராயன் என்று தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது பெருமை மேலிடுகிறது.
சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு, வேலூர் சிப்பாய் புரட்சி, கரூர் கோட்டைப் போர், தோள்சீலைப் போராட்டம், பெருங்காமநல்லூர் முற்றுகை உள்ளிட்ட முக்கிய வரலாற்றுச் சம்பவங்களையும் நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.