திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு
ஆன்மிக குருமார்களிடம் பெற்ற தீட்சைகள் என வாரியார் குறித்த அனைத்து விவரங்களும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு-கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக்.360; ரூ.350; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-600 002, ✆ 044-2845 7666.
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. அவரே எழுதியது. அவரைப் பற்றிய தனி விவரங்கள், குடும்பம், சொந்த ஊர், இளமைப் பருவம், ஆன்மிக அதிசயங்கள் போன்ற பல விஷயங்கள் பலரும் அறியாதது.
வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையே உள்ள காங்கேய நல்லூரில் 1906-ஆம் ஆண்டு பிறந்த வாரியார் சுவாமிகள் தனது தந்தையின் வழிகாட்டுதலின்பேரில், சமய நூல்களை பாராயணம் செய்து, வேதம், தமிழ்ப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.
தந்தையின் ஆன்மிக பிரசங்கங்களைக் கேட்டு வளர்ந்ததாலும் அது வாரியார் சுவாமிகளுக்கு இயற்கையாக அமைந்துவிட்டது. 12 வயதிலேயே 16,000 பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தவர் வாரியார். இசை மீதான விருப்பத்தால் வீணைப் பயிற்சிக்காக 23 வயதில் சென்னை வந்தார். பயிற்சியின் நிறைவில் குருவுக்கு தட்சிணை கொடுப்பதற்காக தனது முதல் பிரசங்கத்தை புரசைவாக்கத்தில் ரூ.40 சன்மானம் பெற்று நடத்தி பெயர் பெற்றார்.
பாம்பன் சுவாமிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, அவரிடம் சடக்கர மந்திரத்தை கனவில் உபதேசம் பெற்றார். தொடர்ந்து முருக பக்தராக, ஆன்மிகச் சொற்பொழிவாளராக வாரியார் சுவாமிகள் பிரபலமானார்.
சுவாமிகளின் குடும்ப வாழ்க்கை, துணைவியாரின் பங்களிப்பு, ஆன்மிகப் பணி, கோயில்களில் செய்த அற்புதங்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்களுடன் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்வியல் நடைமுறைகள், ஆன்மிக குருமார்களிடம் பெற்ற தீட்சைகள் என வாரியார் குறித்த அனைத்து விவரங்களும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.