திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்
இலங்கை மீது படையெடுக்க கடலைத் தாண்டிச் செல்ல, ஒரு அணையைக் கட்டி அதன் வழியே சென்றிட ஸ்ரீராமர் திட்டமிட்டபோது, அனுமதி வேண்டி கடலரசனுக்காகக் காத்திருக்க நேரிட்டது. அப்போது, தருப்பை புல்லணை மீது அவர் சயனி
இலங்கை மீது படையெடுக்க கடலைத் தாண்டிச் செல்ல, ஒரு அணையைக் கட்டி அதன் வழியே சென்றிட ஸ்ரீராமர் திட்டமிட்டபோது, அனுமதி வேண்டி கடலரசனுக்காகக் காத்திருக்க நேரிட்டது. அப்போது, தருப்பை புல்லணை மீது அவர் சயனித்திருந்தார்.
அதனால்தான், தருப்பை புல் அணை என்பது, நாளடைவில் திருப்புல்லாணி என மருவியதாக பெயர்க்காரணம் கூறுவர்.
ராமநாதபுரத்துக்கு, தென்கிழக்கே 8 கி.மீ. தூரத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தலம் ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்.
மூன்று மூலவர் சந்நிதிகள் உள்ள ஆலயம்: இத்திருக்கோயிலில் 3 முலவர்களுக்கும், தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன.
அருள்மிகு ஆதிஜெகன்னாதர் (அமர்ந்த கோலம்) ஸ்ரீதர்ப்பசயனராமர் (சயனக் கோலம்) ஸ்ரீபட்டாபி ராமர் (நின்ற கோலம்) ஆகிய 3 முலவர்களுடன் அருள்பாலிக்கும் தலம்.
ஆலயச் சிறப்பு: பெருமாளுக்குரிய 108 திவ்விய திருத்தலங்களில், பாண்டிய நாட்டில் 4-வது தலமாகும்.
மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 முப்பெருமைகளை உடையது.
விபீஷணன், சமுத்திரராஜன், சுகஸ்தாணன் போன்றவர்கள் சரணாகதி அடைந்த இடமாதலால், இதற்கு சரணாகதி ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
புத்திரப் பேறு இல்லாத தம்பதிகள், இத்தலத்திலுள்ள இறைவனை வணங்கி, நாகப்பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் புத்திரப் பேறு கிடைப்பதாக ஐதீகம்.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் நாகத்தின் மீது நடனமாடும் ஸ்ரீசந்தானக் கண்ணன், இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத் திருப்பணியை ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களே செய்திருக்கின்றனர்.
திருவிழாக்கள்: இக்கோயிலில் ஸ்ரீபட்டாபிராமர் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீபவித்திரோற்சவம், ஸ்ரீஆதிஜெகன்னாதர் பிரம்மோற்சவம் ஆகியன முக்கியத் திருவிழாக்களாகும்.