பழனியில் உலகநலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம்
வேதமந்திரங்களை முறையாக ஒலிக்கும்போது எழும் நாதஇசையில் கட்டுண்ட இறைசக்தி பூமியில் இறங்கி அறம் ஓங்கவும், பூமி செழித்து வளரவும், வையகம் வாழ்வு வாழவும் உதவும் என்பது வேதரிஷிகள்
பழனி அடிவாரம் சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மஹாருத்ர மஹாயக்ஞம் நடைபெற்றது.
வேதமந்திரங்களை முறையாக ஒலிக்கும்போது எழும் நாதஇசையில் கட்டுண்ட இறைசக்தி பூமியில் இறங்கி அறம் ஓங்கவும், பூமி செழித்து வளரவும், வையகம் வாழ்வு வாழவும் உதவும் என்பது வேதரிஷிகள் கடைப்பிடித்த தனிப்பெரும் வழி. இதை கருத்தில் கொண்டு பழனி அடிவாரம் சங்கராலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மை கருதியும், இந்தியத் திருநாட்டின் ஒற்றுமை வலுப்பெறவும், தேசியம் வளம் பெருகவும் மஹாருத்ரயாகம், சுதர்சனஹோமம், ஐக்ய மத்ய சூக்தம், ஸ்ரீசூக்தஹோமம், ஸ்ரீதுர்க்கா சூக்தஹோமம் ஆகியன நடைபெற்றது. 48வது ஆண்டாக நடைபெற்ற இந்த மஹாருத்ர மஹாயக்ஞத்தின் போது ஸ்ரீருத்ர, சுதர்சன, ஸ்ரீசூக்த, துர்க்கா சூக்த ஹோமங்கள் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை சோடச ஸஹஸ்ர மஹாகணபதி ஹோமம் நடத்தப்பட்டு யாகம் துவங்கப்பட்டது.
திங்கள்கிழமை மஹாருத்ர சங்கல்பம், மஹா ருத்ர ஜெபம் ஆரம்பம், ருத்ரா அபிஷேகம், ஹோமம், கோபூஜை, சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமங்களும், செவ்வாய்க்கிழமை மஹா கணபதி ஹோமம், ருத்ர ஜெபம், ருத்ரா அபிஷேகம், ஸ்ரீசூக்தஹோமம், பாக்கிய சூக்த ஹோமம், உமா மகேஸ்வர தம்பதி பூஜை ஆகியனவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீராஜராஜேஸ்வரி ஸ்ரீசக்ரபூஜை நடைபெற்றது. ஆலப்புழை முன்னாள் சபரிமலை மேல்சாந்தி பிரம்மஸ்ரீகிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையின் போது சுமார் ஐந்து மணி நேரம் சக்கரம் வரையப்பட்டு குத்துவிளக்குகள், பல்வேறு வகையான மலர்கள் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் பங்கேற்க ஸ்ரீசக்ரபூஜை நடைபெற்றது.
புதன்கிழமை நிறைவு நிகழ்ச்சியாக ருத்ரஜெபம், ருத்ரஜெப ஹோமம் நடத்தப்பட்டு வசூர்தாரா மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. பூர்ணாஹூதியில் பழங்கள், பட்டுசேலைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் இடப்பட்டது. தொடர்ந்து மஹாதீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மதியம் உச்சிக்காலத்தின் போது கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. யாக ஏற்பாடுகளை மஹாருத்ர யக்ஞ கமிட்டி செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில் சிவக்குமார், பிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், எம்எல்ஏ., வேணுகோபாலு, யக்ஞ கமிட்டியின் துணை சேர்மன்கள் மும்பை நாராயணமூர்த்தி, சேஷாத்ரி, சென்னை பாலசுப்ரமணியம், தலைவர் சகஸ்ரநாமம், உப தலைவர் ஹரிஹரமுத்து, மும்பை சுப்ரமண்யன், எர்ணாகுளம் ஜெயக்கிருஷ்ணன், பெங்களூரு கார்த்திகேயன், பழனி கிருஷ்ணமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.