காளஹஸ்தி சிவன் கோயிலில் நாகர் சிலை பிரதிஷ்டை பூஜையை நவம்பர் மாதம் முதல் தொடங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜை செய்ய உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அதுபோல் நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை மற்றும் ஹோமம் நடத்தி அதை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யும் நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜையும் கோயிலில் நடைபெற்று வந்தது.
ஆனால் கோயிலில் இடப் பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் நாகர் சிலை பிரதிஷ்டை பூஜையை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து கோயிலில் பணிபுரியும் சில அர்ச்சகர்கள் அருகில் உள்ள சில மடங்கள், நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சில இடங்களில் ரூ. 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு நாகர் சிலை பிரதிஷ்டை பூஜையை செய்து வைக்கின்றனர்.
கோயிலை சுற்றியுள்ள தனியார் வாடகை அறைகளிலும் சில இடைத்தரகர்கள் மூலம் இந்த பூஜை நடைபெற்று வருகிறது. இதையறிந்த கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் பூஜை என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த பரத்வாஜ தீர்த்தம் அருகில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் நாகர்சிலை பிரதிஷ்டை பூஜையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.