ஆன்மிகம்

மீன ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2017 

தினமணி

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுங்கள். 

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத மீன ராசிக்காரர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும் என்று உணர்ந்த நீங்கள் அன்பும் அணுகுமுறையும் கொண்டவர்கள்.

கிரகநிலை: 
இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். 
திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.

சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பயணங்களில் அதிர்ஷ்ட தேவதை தரிசனம் தருவாள். இதனால் பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 

வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும். 

பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். 

மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்திரட்டாதி:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

ரேவதி:
பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை. 

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும். 

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT