ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை 40 நாள் நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்சா பந்தன் அன்று நிறைவு பெறுகிறது.
பகல்காம், காந்தர்பால் ஆகிய இடங்களில் இருக்கும் 2 முகாம்களில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களை கொண்ட முதல் குழு ஜம்முவில் இருந்து இன்று பயணம் மேற்கொள்கிறது. இதையொட்டி, யாத்ரீகர்கள் செல்லும் வழித்தடங்களில், மாநில காவல்துறையினர், ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.