கடலூர் மாவட்டம், நல்லூர் வட்டம், நரசிங்கமங்கலம் சிவன்கோயில். கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து திட்டக்குடி சாலையில் நத்தபாடி எனும் ஊரில் இருந்து வலது புறம் திரும்பி தாழநல்லூர் ரயில் நிலையத்தினை தாண்டினால் நரசிங்கமங்கலத்தினை அடையலாம்.
சில தெருக்களை மட்டுமே கொண்ட சிறிய ஊர். இங்கே கிழக்கு நோக்கிய சிதிலமடைந்த சிறிய சிவாலயம் காலத்தினால் முன்னூறு ஆண்டுகள் முற்பட்டது. இறைவன் நாகநாதீஸ்வரர் இறைவி பெயர் தெரியவில்லை ஆனால் அந்த இறைவிக்கு சமமான அந்தஸ்துடைய ஒரு மூதாட்டியின் பெயர் எனக்குத் தெரியும், அவர் பெயர் பழனியம்மாள்.
இதோ இந்த சிதிலமடைந்த கோயிலைக் கடந்த 40 வருடங்களாக எந்த பிற வருமானம் இன்றி கூட்டிபெருக்கி இறைவனையும் அவனின் மைந்தர்கள் இருவரையும் காத்து நிற்கும் இவர் உமையம்மைக்கு நிகரானவள் தானே?
இவரது கணவர் இருந்தவரை அவர்கள் இவரும் அவர்களுக்குக் கிடைக்கும் காசை வைத்து ஒருகால பூஜை செய்து வந்தனர். அவர் இறந்து போய்விட தனக்குச் சொந்தமான இரு காணி நஞ்சை நிலத்தினை குத்தகைக்கு விட்டு அதில் நெல்வருவாயாக கிடைக்கும் சில மூட்டை நெல்லை வைத்து தானும், உண்டு இறைவனுக்கும் செலவிட்டு வரும் இவரின் ஒரே ஆசை இக்கோயிலைக் குடமுழுக்கு நடத்தி பார்த்திடவேண்டும் என்பதே.
நம்பிகெட்டவர் எவரைய்யா எனும் வரிகள் - என்றேனும், எவராலேயினும் மெய்ப்பிக்கப்படும்.
அதுவரை அவரிருப்பாரா?
- கடம்பூர் விஜயன்