முகப்பு
ஆன்மிகம்

முருகனுக்கு மட்டும் அல்ல, ஐயப்பனுக்கும் இருக்கிறது அறுபடை வீடு தெரியுமா?

அறுபடை என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் தான்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

அறுபடை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் தான். தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான  ஐயப்பனுக்கும் 6 கோயில்கள் உள்ளன. இவற்றை ஐயப்பனின் "அறுபடை வீடுகள்' என்கின்றனர்.

1. சபரிமலை

சபரிமலையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக  அருள்புரிகிறார்.

Advertisement

2. எருமேலி

கைகளில் வில், அம்பு ஏந்தி வேட்டைக்கு செல்லும் திருக்கோலத்தில் எருமேலியில் காட்சி தருகிறார் ஐயப்பன்.

3. ஆரியங்காவு

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ரகுல தேவி  புஷ்கலையுடன் அரசராகக் காட்சி தருகிறார் ஐயப்பன்.

4. அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில்  இது. இங்குள்ள ஐயப்பன் விக்ரகம் மிகுந்த பழைமை வாய்ந்தது.

இங்கே வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக்  காட்சி தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை "கல்யாண சாஸ்தா' என்று  அழைக்கிறார்கள். இவரை வழிபட திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

5. பந்தளம்

பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்ட பகுதியே பந்தளம். அந்த மன்னன் கட்டிய கோயில் இங்குள்ளது. இங்குதான்  ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

6. குளத்துப்புழா

செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் "பால சாஸ்தா' என்று  அழைக்கப்படுகிறார்.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது. மலையாள நாட்காட்டியின்படி, மேஷம் (சித்திரை) மாதம் வரும் விசுப் பெருவிழா இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் ஐயப்பனின் அறுடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments