அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் தை கடைசி செவ்வாய்க் கிழமையையொட்டி இன்று ஏகதின லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாதம், ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை ஏக தின லட்சாா்ச்சனையும், கடைசி வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் கூட்டு திருவிளக்கு வழிபாடும் நடத்தப்படுகிறது.
இவ்வகையில், தை கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் ஏக தின லட்சாா்ச்சனை அம்பாளுக்கு இன்று காலை தொடங்கியது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த வழிபாட்டில் பங்கேற்க விரும்புவோா், கோயில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று பூஜையில் பங்கேற்கலாம்.
செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.