திருவள்ளூரில் உள்ள தானப்பநாயக்கன் மண்டபத்துடன் இணைந்த கோ சாலையில் ஸ்ரீவீரராகவ சுவாமி வனபோஜன மஹோத்ஸவத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இந்த வனபோஜன உற்சவ விழாவை முன்னிட்டு, திருக்கோயிலிலிருந்து காலையில் புறப்பட்ட வீரராகவர், தானப்பநாயக்கன் மண்டபத்தில் உபயநாச்சியாருடன் எழுந்தருளினார். தொடர்ந்து, அந்த மண்டபத்துடன் இணைந்த கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு வாழைப் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மாலையில் சாற்று மறை மற்றும் தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்து வீரராகவர் ஊர்வலமாக திருக்கோயிலைச் சென்றடைந்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, தரிசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.