திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில், மழை வேண்டி வருண ஜபம், யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு, கோயில் இணை ஆணையர் ஆர்.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். காலை 7 மணிக்கு கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் 15-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் குளத்தில் மூழ்கி, வருண ஜபம் செய்தனர். மேலும், பிரம்ம தீர்த்தக் குளக்கரைப் பகுதியில் இருந்த மண்டபத்தில் மழை வேண்டி, வருண யாகமும் நடைபெற்றது.
காலை 7 முதல் முற்பகல் 11 மணி வரை வருண ஜபம், யாகம், கலசாபிஷேகம், திருப்பதிகங்கள் ஓதும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து, ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனுக்கு சங்காபிஷகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலர் கே.ராஜன், மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.