நவக்கிரகத் தலங்களில் ராகு ஸ்தலமாகக் கருதப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நவக்கிரகத் தலங்களில் ராகு ஸ்தலமாகக் கருதப்படும், இந்தக் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7ஆவது நாளான வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, அதிமுக மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் திருநாகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு சுமார் 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.