காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவத்தின்போது குழந்தைகள் திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் அதிகாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்வர். அப்போது சிலர், குழந்தை திருமணத்தை நடத்துவர். அதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் கல்யாணோற்சவம் நடக்கும் போது திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை அளித்து, கோயில் பி.ஆர்.ஓ. அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்து ரசீது பெற்றவர்கள் மட்டுமே அன்று திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.