பெரிய வியாழன்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால பெரிய வியாழன்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால பெரிய வியாழன் நிகழ்ச்சியாக சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எண்ணற்ற மகிமைகளையும், புதுமைகளையும் கொண்டதாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போறப்படுகிறது. இப்பேராலயத்தில் ஆண்டுதோறும், புனித ஈஸ்டர் நிகழ்ச்சிகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, ஈஸ்டர் பண்டிக்கைக்கு முந்தைய தவக்கால தொடக்க நிகழ்வாக பிப். 14 -ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமைகளில் புனிதப் பாதையில் சிலுவைப் பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய வரலாற்றின் அடிப்படையில், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் மற்றும் பங்குத் தந்தை சூசைமாணிக்கம் ஆகியோர் கழுவி முத்தி செய்தனர்.
முன்னதாக, சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். புனித ஈஸ்டர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்பட திரளானோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.