ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கு கோயிலுக்குச் செல்ல 1.7 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
அந்தவகையில், இந்தாண்டுக்கான புனிதப் பயணம் ஜூன் 28-ம் தேதி 60 நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து இதுவரை 1.69 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1.39 லட்சம் பேர் தரைவழியாகவும், 28,516 பேர் ஹெலிகாப்டர் மூலமாகவும், 2,122 வெளிநாட்டினரும் அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 60 நாள் வருடாந்திர யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்குகின்றது. இந்த ஆண்டு யாத்திரை 20 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 ரக்ஷா பந்தன் அன்று இந்த யாத்திரை முடிவடைகிறது.
இதற்கான முன்பதிவு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, எஸ் வங்கி ஆகியவற்றில் 440 கிளைகளில் இதற்கான முன்பதிவு செய்யப்படுகிறது.
13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாத்திரைக்கு விண்ணப்பிக்க அனுமதி கிடையாது. மேலும், யாத்திரைக்கு விண்ணப்பிப்பவர்கள் பூரண உடல்நலத்தோடு இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம்.
அட்வான்ஸ் ஆன்லைன் புக்கிங் ஏப்ரல் 27-ம் தேதி தொடங்குகின்றது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் நான்கு இடங்களில் ஆன்-ஸ்பாட் முறையில் பதிவு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.