பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதென்றால் அது வியக்குரியது அல்லவா?
அந்தத் திருத்தலம் தான் திருத்தணிகை! ஆம் முருகப்பெருமான் சினம் தணிந்து சாந்த ஸ்சொரூபமாகி அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்த்துவதில்லை. சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகள், பிணிகள் அனைத்தும் தணிந்து போகும் என்பதாலும் இது தணிகை என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருத்தணிகை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவில் தினமும் காலை 11 மணிக்கு கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 13-ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14-ம் தேதியான நாளை காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசி நாள் மட்டும் வள்ளி திருமணம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.