மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமியையொட்டி, 1008 கலச, விளக்கு, வேள்விபூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்த வேள்விபூஜையில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், சாய்சதுரம் உள்ளிட்ட பல வடிவங்களில் 1,000-க்கும் மேற்பட்ட யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் வழிகாட்டுதலின்படி வேள்விபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் யாகசாலை திருஷ்டி கழித்தல், கோபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த வேள்விபூஜையில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தமிழ்நாடு தேர்வாணையக் குழு தலைவர் கே.அருள்மொழி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஷ்வரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் மகேந்திரன், மாவட்ட நீதிபதி கருணாநிதி, ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி சக்திபீட மற்றும் வழிபாட்டுமன்ற நிர்வாகிகளும், தஞ்சை மாவட்டத் தலைவர் வாசன் மற்றும் சக்தி பீடங்களின் இணைச்செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.