திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 4.13 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ. 4.13 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 77 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 6 லட்சம், ஸ்ரீ சீனிவாச சங்கரநேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ. 11 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 60 லட்சம் என மொத்தம் ரூ. 77 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
சோதனைச் சாவடியில் ரூ.1.98 லட்சம் கட்டண வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 87,154 பயணிகள் சோதனைச் சாவடியை கடந்துள்ளனர். 8,976 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ. 1.98 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 12,276 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகார் அளிக்க...
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.