ஏழுமலையான் கோயிலில் உள்ள உற்சவமூர்த்திகளின் தங்கக் கவசங்கள் சாஸ்திரப்படி அகற்றப்பட்டன.
ஏழுமலையான் கோயிலில் உற்சவர்களாகக் கொண்டாடப்படும் மலையப்பர், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் உற்சவர்கள் தங்கக் கவசத்துடன் மட்டுமே காட்சியளிப்பர்.
அதனால் திருமஞ்சனம் நடத்தும்போது பால், தயிர், தேன், பழரசம் உள்ளிட்டவை அவர்களின் திருப்பாதத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகின்றன. சந்தனம், மஞ்சள், துளசி ஆகியவையே உற்சவர்களின் தலை மீது சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், உற்சவர்களுக்கு ஆண்டு முழுவதும் அணிவிக்கப்பட்டுள்ள தங்கக் கவசங்கள் ஆனி மாதம் நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்திற்கு முன்னர் வரக் கூடிய செவ்வாய்க்கிழமை அன்று அகற்றப்படுவது வழக்கம்.
வரும் 14 முதல் 16-ஆம் தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதால், உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. தங்கக் கவசத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, செப்பனிடப்பட்டு அவை உற்சவர்களுக்கு மீண்டும் 16-ஆம் தேதி அணிவிக்கப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாளில் முத்துக் கவசத்தையும், இரண்டாம் நாளில் வைரக் கவசத்தையும், மூன்றாம் நாளில் செப்பனிடப்பட்ட தங்கக் கவசத்தையும் அணிந்து உற்சவர்கள் மாட வீதியில் வலம் வர உள்ளனர்.