திருவள்ளூர் அருகே லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் அருகே நரசிங்காபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில். இக்கோயிலில் மூலவர் நரசிம்மர், தாயார் லட்சுமிதேவியை இடது தொடை மீது அமர்த்தி, ஒருவருக்கொருவர் நெருக்கமான கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கு ஆண்டுதோறும் ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு உற்சவர் சப்பரத்திலும், 8 மணிக்கு சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
விழாவின், மூன்றாம் நாளான 27-ஆம் தேதி காலை 6 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. 29-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும், ஜூலை 1-இல் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவும், 3-ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
10 நாள்கள் நடைபெறும் விழாவில், நரசிம்மர் பல்வேறு வாகனங்களில் வலம் வருகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.