சீர்காழி அய்யனார் கோயிலில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அய்யனார் கோயில் தெருவில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் சட்டைநாத தேவஸ்தானத்தின் உப கோயிலாகவும் உள்ளது. போருக்குப் புறப்பட்ட இந்திரன் தனது மனைவி இந்திராணியை இக்கோயில் அய்யனார் பாதுகாப்பில் விட்டுவிட்டு சென்றதாக ஐதீகம்.
சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் 150ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்ததாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்யும் பொருட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.
இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், மூலவர் விமான கலசத்துக்கு புனிதநீரால் குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் அய்யனார், பரிவார தெய்வங்கள், குதிரை, யானை வாகனத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.