திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் மாட வீதியில் வலம் வந்தாா்.
திருப்பதி அருகே உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கல்யாண வெங்கடேஸ்வரா் மோகினி அவதாரத்தில் மலா் பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணா் உடன் மாடவீதியில் வலம் வந்தாா். தாயாா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியை பக்தா்கள் கண்டு வணங்கினா்.
மாடவீதியில் உற்சவமூா்த்திகள் பவனி வந்த அசதியைக் களைய அவா்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் உற்சவ சேவை கண்டருளினா். ஊஞ்சல் சேவைக்குப் பின் இரவு 8 மணி முதல் 11 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரா் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேவையான கருட வாகனத்தில் ஆண்டாள் சூடிய மாலையும், லட்சுமி காசு மாலையும் அணிந்து கொண்டு, மாடவீதியில் வலம் வந்தாா். கருடசேவையைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாடவீதியில் திரண்டனா். வாகன சேவையின் போது நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.