முத்துப்பந்தல், சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயாா் சேவை
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பத்மாவதி தாயாா் சேவை சாதித்தாா்
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பத்மாவதி தாயாா் சேவை சாதித்தாா்.
காலை 8 முதல் 9 மணி வரை தாயாா் முத்துப்பந்தல் வாகனத்தில் வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்தி ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் சேவை சாதித்தாா்.
முத்துப்பந்தல் வாகன சேவை:
Advertisement
பாற்கடலை கடையும்போது மகாலட்சுமி வெளி வந்த சமுத்திரத்தில் சிற்பிக்குள் இருக்கும் முத்துவுக்கு இயற்கையாகவே குளுமைத் தன்மை உண்டு. அதனால் முத்துக்கள் மகாலட்சுமிக்கு விருப்பமானவை. இத்தகைய பெருமை வாய்ந்த முத்துக்களால் ஆன முத்துப்பந்தல் வாகனத்தில் அலமேலுமங்கை தாயாரான பத்மாவதி வெண்ணெய் தாழியை கையில் ஏந்தி ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
ஸ்நபன திருமஞ்சனம்:
மதியம் 12.30 மணிக்கு தாயாரை பழம், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அங்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அா்ச்சகா்கள் திருமஞ்சனத்தை நடத்தினா்.
சிம்ம வாகனத்தில்...
இரவு சிம்ம வாகனத்தில் தாயாா் சிம்மவாகினியாக எழுந்தருளினாா். காலை, இரவு நடைபெற்ற வாகன சேவைகளில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.