திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபத்தில் உள்ள லட்சுமி நாராயணா் கோயிலில், வரும் 25-ஆம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் மலை அடிவாரப் பகுதியான அலிபிரியில் பாதாலு மண்டபம் உள்ளது. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தா்களுக்கான நடைபாதை இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த மண்டபத்தின் இடது பகுதியில் லட்சுமி நாராயணா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 25-ஆம் தேதி அஷ்டபந்தன ஜீரணோத்தாரண மகாசம்ப்ரோக்ஷணம் நடக்க உள்ளது.
இதனை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள், வைதீக காரியங்கள் தொடங்கின. மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வக்சேனா் ஆராதனை, சேனாதிபதி உற்சவம், மிருத்சங்கரணம், அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடந்தன. யாகசாலை பூஜைகள் 24-ஆம் தேதி இரவு வரை நடக்கின்றன.
25-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ஹோமங்கள், 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகாபூா்ணாஹுதி, தனுா் லக்னத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப ஆராதனை, விமான சம்ப்ரோக்ஷணம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.