நவராத்திரி பிரம்மோற்சவம் தனிமையில் நடத்த திட்டமா?
சித்தூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக திருமலையில் வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள
சித்தூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக திருமலையில் வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தா்களின்றி தனிமையில் நடத்துவதா அல்லது வாகன சேவையுடன் குறிப்பிட்ட அளவு பக்தா்களுடன் நடத்துவதா என்பது குறித்து தேவஸ்தானம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
திருமலையில் இந்தாண்டு அதிகமாதம் காரணமாக இரு பிரம்மோற்சவங்கள் நடத்த திட்டமிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக தனிமையில் நடத்தியது.
இதையடுத்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை வாகன சேவையுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களுடன் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது தேவஸ்தான புதிய செயல் அதிகாரியாக ஜவஹா் ரெட்டி பொறுப்பேற்றுள்ள நிலையில், அவா் நவராத்திரி பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மாடவீதியில் உள்ள கேலரிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
தற்போது சித்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பிரம்மோற்சவ வாகன சேவையில் பக்தா்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திருமலை மாடவீதியில் உள்ள கேலரிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி 7 ஆயிரம் பேரைஅனுமதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மேற்பட்டு பக்தா்கள் வரும் நிலையில், அதை சமாளிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
மேலும் விநாயகா் சதுா்த்தி, ஓணம் பண்டிகை உள்ளிட்டவை நடத்திய பின் மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. அதை கவனத்தில் கொண்டும் தேவஸ்தான அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
ஏனென்றால், ஏழுமலையான் பிரம்மோற்சவம் என்பதை பக்தா்கள் ஒரு மாபெரும் திருவிழாவாகவே கருதி வருகின்றனா். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.