பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்
கலைஞரும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாரே? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் - இபிஎஸ் பிரசாரம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தமது கட்சியுடன் கூட்டணியில் உள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் ஒரே வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :
“ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் பேசுகிறார் - இப்போதிருக்கிற பாரதீய ஜனதா அரசாங்கம் துரோகம் செய்து, துரோகம் செய்திருக்கிறாங்க.. அந்தக் கட்சியோடுதானே நீங்கள் கூட்டணி வைத்திருந்தீர்கள். வைத்திருந்தார்களா இல்லையா? (மக்களைப் பார்த்து...)
1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா - திமுக கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று, மத்தியிலே மறைந்த வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது. அந்த மத்திய அமைச்சரவையிலே தமிழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார்.
Advertisement
அது மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2001-இல், அப்போதும் திமுக - பாஜக கூட்டணி இருந்ததா இல்லையா? இருந்தது இல்லையா! இதுவே ஆதாரம் (அப்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஒரே மேடையில் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்து பேசும் படத்தைக் கண்பித்தார்).
ஆக, திமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி கிடையாது. அண்ணா திமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி. இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சந்தர்ப்பவாத அரசியல்தானே?
அஇஅதிமுக-வை பொருத்தவரைக்கும் நாம் கூட்டணி வைக்கிறோம். எதற்காக? வாக்குகள் சிதறாமல்.. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்; ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படியில்தான் இந்தக் கூட்டணி வைத்திருக்கிறோம்.
இன்றைக்கு அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுகவும் பாஜகவும் பாமகவும் அமமுகவும் இணைந்து ஒத்த கருத்து - மக்கள் விரோத ஆட்சி, ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே அமைக்கப்பட்ட கூட்டணி; இயற்கையான கூட்டணி” என்றார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்ட பிரச்னைகளைப் பற்றி பேசியதுடன் அங்கு திரண்டிருந்த மக்களிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்து அவர் பிரசாரத்தை முடித்தார்.