முகப்பு
செய்திகள்

இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்

மஹாளயபட்சம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளயபட்சம் என்கிறோம்.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 12:40 PM
மஹாளயபட்சம் ஆரம்பம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

மஹாளயபட்சம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளயபட்சம் என்கிறோம். பித்ருக்களின் ஆராதனைக்கு உகந்த காலம் என்றும் சொல்லலாம். 

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் மஹாளயபட்சம் ஆரம்பமாகிறது. பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். 

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளயபக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

Advertisement

மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்களும் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சமாகும். பித்ரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கப்பெறும்.

மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். 

மஹாளயபட்சத்தில் வரும் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு, கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை திதியிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

நமது மூதாதையர்களின் ஆசீர்வாதம் நம்மைக் காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். 

அவன் வாழ்க்கையில் எப்பாடுபட்டேனும் முன்னுக்கு வந்துவிடுவான். ஆக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொருவரும் அவரது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாள்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைவார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாள்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத்திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

* முதல்நாள் - பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

* இரண்டாம் நாள் - துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

* மூன்றாம் நாள் - திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

* நான்காம் நாள் - சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

* ஐந்தாம் நாள் - பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

* ஆறாம் நாள் - சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும்.

* ஏழாம் நாள் - சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

* எட்டாம் நாள் - அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

* ஒன்பதாம் நாள் - நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத் தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்
பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

* பத்தாம் நாள் - தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

* பதினொன்றாம் நாள் - ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

* பனிரெண்டாம் நாள் - துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

* பதின்மூன்றாம் நாள் - திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

* பதினான்காம் நாள் - சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

* பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை நாளாகும்.

மகாளய பட்சம் என்னும் இந்த அரியச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தொடர்ந்து 15 நாட்களும் தர்ப்பணம் செய்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.