FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:47 pm IST
மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்யும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாக்கு சேகரித்து, ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே அவர் பேசியதாவது, திமுக தலைவர் கருணாநிதியால் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜா, இந்த தொகுதியில் நான்காவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த முறை 37,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்தமுறை குறைந்தது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நீங்கள் எம்எல்ஏவுக்கு வாக்களிக்க வில்லை. திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சராக தொடர உள்ளவருக்கு வாக்களிக்க உள்ளீர்கள்.

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளதற்கு முழுமுதற் காரணம் டி.ஆர்.பி. ராஜாதான். இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு தமிழகத்தை நோக்கி வந்துகொண்டு உள்ளது. மேலும், தொழில் முதலீடு வந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் காரணம் தொழில் துறை அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பி. ராஜாதான். அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வளர்ச்சிக்கான வாக்காகும்.

Advertisement

Advertisement

இந்த தொகுதியில் மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவின் காலில் விழுந்துகிடந்து பின்னர் அவருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி சசிகலாவிற்கு துரோகம் செய்த டி.டி.வி. தினகரன், அதிமுக அமைச்சர்களை டயர் நக்கி எனக் கூறி தனது தந்தை பாமக தலைவர் டாக்டர் மு.ராமதாஸுக்கு துரோக்கம் செய்துள்ள அன்புமணி ஆகிய துரோகங்களின் மொத்தக் கூட்டம் கூட்டணி சேர்ந்து ஒன்றுசேர்ந்துள்ளது. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று போட்டியிடவில்லை. அதிமுகவை யார் கைப்பற்றுவது என எடப்பாடி, டி.டி.வியும். டாக்டர் ராமதாஸிடமிருந்து பாமகவை கைப்பற்றுவதற்காக அன்புமணியும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

சசிகலா காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை பெற்ற படத்தை நான் காட்டி விமர்சிப்பதால் என்னை செத்துப் போ என ஆத்திரத்தில் பேசுகிறார். நான் அப்படி பேச மாட்டேன். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்வதுடன் அதிமுக பொதுச் செயலாளராக தொடர வேண்டும் அது தான் நமக்கு (திமுகவிற்கு ) நல்லது.

மன்னார்குடியில் மீண்டும் திமுக வெற்றி பெற்றால், மினி டைடல் பூங்கா, இயற்கை உணவு பூங்கா, யுபிஎஸ், டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம், மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பூங்கா, நிலத்தடி நீர் உப்பு தன்மையை அகற்ற சிறப்பு திட்டம், தனியார் துறைகள் வேலைவாய்ப்பு சிறப்பு தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என வேட்பாளர் ராஜா கோரிக்கை வைத்துள்ளார். இவை அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்புடன் தொகுதி வளர்ச்சிக்காக கொண்டு வரப்படும் என உறுதியளிக்கிறேன்.

இன்னும் 13 நாள்கள்தான் தேர்தலுக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து நாம் அளிக்கும் வாக்கு தில்லி நலனுக்கா அல்லது தமிழகத்தின் உரிமைக்கா என விளக்கம் அளித்து திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில், திமுக பொருளார் டி.ஆர்.பாலு எம்பி, தஞ்சை எம்பி ச. முரசொலி உள்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has stated that the alliance between EPS, TTV Dhinakaran, and Anbumani is not for the purpose of forming a government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments