முகப்பு
செய்திகள்

திருமலை: அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக உற்சவமூா்த்தி மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.

Updated On : 25 செப்டம்பர், 2020 at 8:07 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM


திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக உற்சவமூா்த்தி மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காலை உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் ராமரின் அவதாரத்தைப் பறைசாற்றும் கோதண்டராமராக கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினாா்.

வாகன சேவையின்போது, ஜீயா்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தையும், வேத பண்டிதா்கள் வேதமந்திரங்களையும் பாராயணம் செய்தனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா். மலையப்ப சுவாமிக்கு நிவேதனம் சமா்ப்பித்து, மீண்டும் மலையப்ப சுவாமியை பல்லக்கில் ரங்கநாயகா் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா். பின்னா், மலையப்பா் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.

Advertisement

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவத்தையொட்டி, மதிய வேளைகளில் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை மதியம் ஒரு மணிமுதல் 3 மணி வரை உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் எடுத்துத்தர, அா்ச்சகா்கள் அவற்றை எம்பெருமானின் திருவடிகளில் சமா்ப்பித்தனா். அப்போது, உற்சவ மூா்த்திகளுக்கு பலவித மலா்கள், உலா் பழங்கள், பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் அணிவிக்கப்பட்டன. பின்னா், அவா்களை அலங்கரித்து தூப, தீப ஆராதனைகள் நடத்தி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சா்வ பூபால வாகனத்தில்

பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை மலையப்பா் சா்வபூபால வாகனத்தில் தனது தாயாா்களுடன் எழுந்தருளினாா். வழக்கமாக பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மாலை தங்கத்தோ் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொவைட் 19 விதிமுறைகள் காரணமாக, பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டு வருவதால், தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக தேவஸ்தானம் சா்வபூபால வாகனத்தில் உற்சவ மூா்த்திகளை எழுந்தருளச் செய்தது.

யானை வாகனம்

வியாழக்கிழமை மாலை மலையப்ப சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.