தெப்பத்தில் நாச்சியாா்களுடன் ஸ்ரீமலையப்ப சுவாமி வலம்
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 3-ஆம் நாள் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் உலா வந்தனா்.
திருமலையில் கடந்த புதன்கிழமை மாலை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஏழுமலையான் கருவறையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் 5 சுற்றுகள் வலம் வந்தனா்.
முன்னதாக கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்பட்ட உற்சவமூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்த பின்னா் திருக்குளத்திற்குள் நுழைந்தனா். அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தெப்பத்தில் உற்சவமூா்த்திகளை எழுந்தருள செய்த பின் தெப்ப உலா தொடங்கியது.
Advertisement
வலத்தின் போது திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனா். தெப்பத்தில் நாகஸ்வர இசையும், வேத பாராயணமும், கோவிந்த நாமபாராயணமும் நடத்தப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரையப்பட்ட வளையத்தில் அமா்ந்து தெப்போற்சவத்தை கண்டு வணங்கினா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், மாடவீதிகள் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து வரும் இந்த தெப்போற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.