அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தது குறித்து...
அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 8) தெரிவித்தார்.
முதல்வர் வேட்பாளரான மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 8) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
Advertisement
''இந்தத் தொகுதி மிக முக்கியமான தொகுதி. இந்தத் தொகுதி வேட்பாளருக்கும் (மு.க. ஸ்டாலின்) எனக்கும்தான் போட்டி.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு பேச்சு. திமுக அறிக்கையில் 525 வாக்குறுதிகளை மு.க. ஸ்டாலின் அறிவித்தார். நான்கில் ஒரு பகுதி வாக்குறுதிகளை கூட அவர் நிறைவேற்றவில்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைத்தாரா? கேஸ் சிலிண்டர் மானியம் கொடுத்தாரா? ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை கொடுத்தாரா? கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பானதொரு தொகுதியாக மாறும்.
என்னை துடைத்தெறிந்துவிடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அதிமுகவில் தொண்டர்களைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. 8 கோடி மக்களுக்கான திட்டங்களை இயற்றக்கூடிய மாமன்றத்தின் மேஜையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடினார்கள். இவர்களை தேர்வு செய்தால் நாடு எப்படி இருக்கும்? திமுகவில் ரெளடிகள் ராஜ்ஜியமாக தமிழ்நாடு இருக்கிறது.
சட்டப்பேரவையில் நான் பெரும்பான்மையை நிரூபித்ததால் சட்டையை கிழித்துக்கொண்டு சாலையில் சென்றார் ஸ்டாலின். பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்.
கொளத்தூரில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது என்றனர். ஆனால் தேங்குகிறது. ஒரே ஒரு மழைக்கே வெள்ளம் சூழ்ந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது. அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பானதாக மாறும். சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவந்தோம்.
கரோனா காலகட்ட நெருக்கடியை திறம்பட கையாண்டோம். அப்போது தமிழ்நாட்டை பின்பற்றச் சொன்னார் பிரதமர் மோடி. புயல், வெள்ளத்தில் பெரும்பாலான பொது விநியோக கட்டமைப்புகள் சிதைந்தன. அந்த இக்கட்டான சூழலில் கூட அதிமுக திறம்பட ஆட்சி செய்தது.
திமுக ஆட்சியில் பெருந்தொற்று, மழை, வெள்ளம் என எதுவும் இல்லை. ஆனால், சிறப்பான ஆட்சியை திமுகவால் கொடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியது திமுக. அப்படி என்ன பெரிய திட்டங்களை திமுக கொண்டுவந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், மக்கள் பெற்ற பலன்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் என்னால் பேச முடியும். இதே கொளத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க நான் தயார்.
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையங்கள், பாலங்கள், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 17 அரசு மருத்துவமனைகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண் கல்லூரி, ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை தொடக்கிவைத்தேன். அதனை ஸ்டாலின் திறந்துவைக்கவில்லை.
கொரட்டூர் இரட்டை ஏரி மேம்பாலம், போரூர் மேம்பாலம், கொரட்டூர் ரயில் பாலம், கீழ்க்கட்டளை, பல்லாவரம் மேம்பாலம் போன்றவை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. மேம்படுத்தப்பட்ட சாலைகள் ஏராளம் கட்டப்பட்டுள்ளன. இப்படி எந்தத் துறையில் கேட்டாலும் விவாதிக்கத் தயார்.
மருத்துவத் துறை இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. உள்ளாட்சித் துறையில் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளோம். மருத்துவத் துறையில் விருது பெற்றுள்ளோம். திமுக ஆட்சியில் இப்போது போதிய மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களே இல்லை. மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களே போராடும் நிலையில்தான் திமுக ஆட்சி இருக்கிறது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.