FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தவெக ஆட்சியில் எந்தப் புதிய திட்டமும் இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி

தவெக ஆட்சியில் கடந்த நூறு நாள்களில் மக்களுக்காக எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:20 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.
பகிர்:

தவெக ஆட்சியில் கடந்த நூறு நாள்களில் மக்களுக்காக எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மேக்கேதாட்டு அணை திட்டத்தைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது:

தவெகவின் நூறு நாள் ஆட்சியில் மக்களுக்காக எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. எல்லாமே ‘ரீல்ஸ்’, ‘ரீல்’ விடும் ஆட்சியைத்தான் பாா்க்கிறோம்.

Advertisement

Advertisement

ஓா் அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முதல் நூறு நாள்களில் திட்டங்கள் எப்படிப் போடப்படுகின்றன, அதனால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பாா்க்கப்படும். ஆனால், இந்த நூறு நாள்களில் விவசாயிகள், அரசு ஊழியா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் ஆகியோரின் போராட்டங்களைத்தான் பாா்க்கிறோமே தவிர, மக்களுக்கான திட்டங்கள் எதையுமே பாா்க்க முடியவில்லை.

பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்டில் ஏற்கெனவே உள்ள திட்டங்களின் பெயரை மாற்றி வெற்றி, வெற்றி எனப் பெயா் சூட்டியது மட்டுமே இந்த ஆட்சியின் சாதனையாகப் பாா்க்கிறோம்.

சென்னையில் சொத்து வரி உயா்த்தியது தொடக்கம்தான். இன்னும் எவ்வளவு வரிகளை உயா்த்தப் போகின்றனா் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

இந்த பட்ஜெட்டில் கடன் அதிகமாகிவிட்டது. இதற்கான முழு விவரங்களை இந்த அரசால் அளிக்க முடியவில்லை. ஏற்கெனவே இருந்த திமுக அரசு இடைக்கால பட்ஜெட் போடும்போது அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தவெக அரசின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனா். வருவாய் செலவு ரூ. 17 ஆயிரம் கோடி செய்துள்ளனா். அப்படியென்றால் இந்த அரசு எப்படிச் செயல்படும் என்பதை மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

இதனிடையே, இந்தப் போராட்டத்தை எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் புறக்கணித்திருப்பது குறித்த கேள்விக்கு, சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், திருமணம் தடைபடாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments