விவசாயிகள் சோற்றுக்கு திண்டாடும்போது முதல்வருக்கு நவீன அறையா? இபிஎஸ் கேள்வி!
தவெக அரசுக்கு எதிராக அதிமுக நடத்தும் போராட்டம் பற்றி...
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரியும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும்கூறி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அப்போது அவர் பேசியதாவது:
”ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், தவெக அரசு அதை செய்யவில்லை. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பற்றி இந்த அரசுக்கு கவலையில்லை.
ஜூன் மாதத்தில் கர்நாடக அரசைத் தொடர்பு கொண்டு தண்ணீர் திறப்பது குறித்து பேசவில்லை. டெல்டா மாவட்டத்தில் மட்டும் ஐந்தரை லட்சம் ஏக்கரில் நடைபெறும் குறுவை சாகுபடி இந்தாண்டு செய்ய முடியவில்லை. இரண்டு லட்சம் ஏக்கருக்கு மும்முனை மின்சாரத்தை தவெக அரசு தரவில்லை. ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இன்றி நிலம் கருகி காய்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பேரவையில் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கண்டு கொள்ளவில்லை.
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, அதனை நிறைவேற்றவில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறார்கள். விவசாயிகள் வெய்யிலில் காய்ந்து கொண்டு இருக்கும்போது, முதல்வர் ஜோசப் விஜய் அறையை மாற்றுகிறார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான், மு.க. ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் அந்த அறையில்தான் இருந்து செயல்பட்டோம். விவசாயிகள் சோற்றுக்கு திண்டாடிக் கொண்டிருக்கும்போது, தற்போதைய முதல்வருக்கு நவீன அறைதான் முக்கியம். நடிகர் அப்படிதான் இருப்பார். அதுதான் தலைவிதி, தலையெழுத்து. நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருங்கள், ஆனால், விவசாயிகளை தண்டிக்காதீர்கள்” என விமர்சித்துள்ளார்.
A modern room for the Chief Minister while farmers struggle for food? EPS asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.