ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்
மேஷ ராசியிலிருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்
அருள்மிகு குருபகவான் இன்று (மே 1-ம் தேதி) மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலங்களிலும் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார கோயில்களில் சிறப்பு யாகமும், அதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 1-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். இன்று விடுமுறை நாள் என்பதால், தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. ஆலங்குடி குருபகவான் கோயில், திட்டை குருப்பரிகாரக் கோயில், ஆவடி அருகே பாடியில் அமைந்துள்ள திருவலிதாயம் சிவன் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. ஏராளமான மக்கள் குருபகவானை வழிபட்டனர்.
Advertisement
பல்வேறு கோயில்களிலும் குருபெயர்ச்சி நாளான இன்று அதிகாலை முதல் சிறப்பு குருபரிகார ஹோமம், அதனைதொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி குரு பகவான் கோயிலில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஜோதிட நிகழ்வு
ஸ்ரீ குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22க்கு - மாலை 05.01க்கு துலா லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் ரிஷப ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியையும் - ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.