தஞ்சை: சக்கரவாகேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்த மழைநீர்: பக்தர்கள் அவதி!
கோயில் வளாகத்தில் மழைநீர் தேக்கம் பற்றி..
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் வளாகம் மற்றும் கருவறையில் உள்ளே மழை நீர் புகுந்துள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் திருக்கோயிலின் இணைக்கோயிலாக உள்ளதால் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் தலமாகப் போற்றப்படுகிறது.
இந்த நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோயில் வளாகம், கருவறையைச் சுற்றி மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால் பக்தர்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.
ஆகையால் கோயில் வளாகம் மற்றும் கருவறையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.