2025 ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ உள்ளது.
கிரகண காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம், பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்கள் என்ன என்பதை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையின் சூரியன்-சந்திரன் இணையும்போது சூரிய கிரகணமும், சூரியன் சந்திரன் நேர்கோட்டில் பயணிக்கும்போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
முழு சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது?
ஆவணி மாதம் 22-ம் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை சதயம் நட்சத்திரத்தில் ராகு க்ரஸ்த பூர்ண சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகணம் தொடங்கும் நேரம் - இரவு 9.57
சந்திர கிரகணம் மத்யமம் - இரவு 11.43
சந்திர கிரகணம் நிறைவடையும் நேரம் - செப். 8 அதிகாலை 1.00
பரிகாரம் சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி, அவிட்டம், சதயம், பூரட்டாதி
சந்திர கிரகணம் பற்றிய புராணக்கதை..
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.
இதனால் கிரகணத்தின்போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.
கிரகணம் நிகழும் காலம் பீடை காலம் எனப் புராணங்களில் சொல்லப்படுவதால் அந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக்கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
• கோயில்கள் அனைத்தும் நடை சார்த்தப்பட்டிருக்க வேண்டும்.
• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
• கிரகணம் முழுதும் முடிந்ததும் குளித்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.
குறிப்பு: சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகண தோஷமுள்ளவர்கள் சாந்தி பரிகாரம் செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.