திருவெண்காட்டில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவெண்காட்டில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கப்பட்டது தொடர்பாக...
திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திர திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் அகோர மூா்த்தியாக காட்சியளித்து வருகிறார்.
மேலும் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. உலகிலேயே மூன்று குளங்களைக் கொண்ட ஒரே கோயிலாக இது விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலின் இந்திர திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி கோயிலின் கொடிமரம், விநாயகர் மற்றும் நந்தி ஆகியவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்கிட அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் நந்தி உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து உற்சவத்தை தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.