முகப்பு
செய்திகள்

பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்: பொதுப்பணித்துறை அறிக்கைக்கு காத்திருக்கும் பக்தர்கள்!

பேரூர் தேரோட்டம் நடைபெறுவது பற்றி..

Updated On : 25 மார்ச், 2026 at 6:45 AM
பட்டீஸ்வரர் கோயில்
பகிர்:

பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு அறிக்கைக்குக் காத்திருப்பதால் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் வருகிற 29 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா நடைபெறும், இங்கு உள்ள தேர் 120 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு சூரிய பிரபை, சந்திரப் பிரபையில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 29 ஆம் தேதி தேரோட்டம் நடத்தக் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்து வந்தனர்.

வழக்கமாகத் தேரோட்டத்துக்கு முன்னதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தேரையும், தேர் வரும் சாலைகளையும் ஆய்வு செய்து தடையின்மை சான்று அளிப்பார்கள். அதன்பிறகு தேரோட்டம் நடைபெறும். அதேபோல் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் நேற்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர்களுக்கு தேர் குறித்து முழு திருப்தி ஏற்படாததால், ஆலோசித்து முடிவைத் தெரிவிப்பதாகக் கூறி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

மேலும், அவர்கள் தேரின் நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே மாவட்ட ஆட்சியர் கோயில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் கோயிலில் நேற்று காலை நடந்தது.

கூட்டத்தில் தேர் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் பழுதுகளை நீக்கி திட்டமிட்டபடி தேரோட்டத்தை நடத்தலாமா? அல்லது அடுத்த கட்டமாக என்ன? செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் கொடுக்கும் ஆய்வு அறிக்கை அடிப்படையிலே பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது தெரியவரும், அதற்காக காத்திருப்பதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

summary

As Public Works Department officials are awaiting an inspection report, doubts have arisen as to whether the chariot festival at the Perur Patteeswarar Temple will take place as scheduled on the 29th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.